Monday 17 October 2011

மாறாத உண்மை



பிரேம லதா




என் காதலின் கவிகளை



அப்புறப்படுத்திய உன்னிடம்



கனவுகள் பலிக்க யாசித்தேன்



யாசித்த என்னை



ஒருமுறையேனும் - உன்



யோசிப்பிற்குள்


கொண்டு வருவதேயில்லை....





கணநேரம் கடந்த போதும்


தீராத எனது அழைப்பை - நீ


தீண்டாமலேயே தீர்க்கின்றாய்...


சேவகம் செய்யாத - எனது


அழைபேசியை நோக்கியே


என் பார்வையும் அலைகிறது...


எனது வசந்த வார்த்தைகளை


வம்பாய் மறுக்கின்றாய்!





அன்பை நடவு செய்து


அறுவடை செய்யவே - நான்


நீர்ப்பாசனம் விடுகின்றேன்


என் கண்ணீரைக் கொண்டு!


நீயோ விதைப்பதற்கு முன்பே


அரும்பைக் கிள்ள


ஆயத்தமாகின்றாய்...





பல கவி படைத்தவனிற்கு


பாவியிவளின்


பாசம் புரியவில்லை


என்


காகிதக் கிறுக்கல்களை


கவியாய்க் காண்கின்றன


ஆயிரம் கண்கள்!


அக்கண்களுக்கு தெரியாது


உன்


பார்வைக்காய் தவமிருந்து


கசங்கிக் கிடந்தாலும்


காதலைச் சுமந்தபடி


நிற்கும் காகிதமல்ல அது


காவியம் என்று....


எது எப்படியோ - நீ


என்


நேசத்திற்குரியவன்


என்ற நிலைமாறி - நீ


என்


சுவாசத்திற்குரியவனாகிவிட்டாய்


என்பது மட்டும் முற்றிலும்


மாறாத உண்மை.....



No comments:

Post a Comment

 
;